சிதம்பரத்தில் தனியார் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு பெரிய தெருவைச் சேர்ந்த லோகநாதன் மகள் பார்கவி (22). இவர் சிதம்பரம் அருகே கீழமுங்கிலடியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரி இளநிலை கல்வியியல் (பி.எட்.) படித்து வந்தார்.
இந்த நிலையில், சிதம்பரம் சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற குரூப்-2 தேர்வை எழுத ஞாயிற்றுக்கிழமை சென்றாராம். தேர்வை எழுதிவிட்டு, மேலத்திருக்கழிப்பாலையைச் சேர்ந்த ராஜதுரையுடன் மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் வழியாக ஊர் திரும்பினாராம்.
சிதம்பரம் வேணுகோபால் பிள்ளைத் தெருவில் சென்ற போது, கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அப்போது, கீழே விழுந்த பார்கவி மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியிறங்கியது. இந்த விபத்தில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த ராஜதுரை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சிதம்பரம் நகரக் காவல் நிலைய ஆய்வாளர் குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.