சிதம்பரத்தில் விபத்தில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்.
சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் ராஜேஷ்குமார் (27). இவர் கடந்த மாதம் 30-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். அப்போது கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெருவில் புதை சாக்கடைக்காக தோண்டப்பட்ட குண்டும், குழியுமான சாலையில் கல் தடுக்கி மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்தவர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ராஜேஷ்குமார் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.