திட்டக்குடி கோயில் குளம் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வலியுறுத்தல்
திட்டக்குடியில் கோயில் குளம் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தினார்.
திட்டக்குடியில் புகழ்பெற்ற ஸ்ரீவைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் திருக்குளம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தவாக தலைவர் தி.வேல்முருகன் இந்தக் குளத்தை புதன்கிழமை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த குளத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. வருவாய் ஆவணங்கள் அடிப்படையில் திட்டக்குடி வட்டாட்சியர் சத்தியன் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி எடுத்ததே இதற்குக் காரணம். இந்த குளம் மிகவும் பழைமைவாய்ந்தது. எனவே ஆக்கிரமிப்புகளை மிக விரைவில் முழுமையாக தமிழக அரசு அகற்ற வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால் எங்களது கட்சி தொடர்ந்து போராடும் என்றார் அவர்.
அப்போது, கட்சியின் மாவட்டச் செயலர் சின்னதுரை, ஒன்றியச் செயலர் ரெங்க.சுரேந்தர், நகர தலைவர் முருகன், மாவட்ட மகளிர்அணித் தலைவர் கற்பகம், மாவட்ட துணைச் செயலர் கண்ணன், ஒன்றிய தலைவர் முருகன், ஒன்றிய பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.