சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் மாடியிலிருந்து கீழே குதித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், சேத்தங்குடியைச் சேர்ந்த இளஞ்செழியன் மகன் தமிழ்வேந்தன் (26). கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் புலத்தில் (பி.இ.) மூன்றாமாண்டு படித்து வந்தார். இவர், 2010-ஆம் ஆண்டு முதல் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாராம். மேலும், அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, சென்னையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், தமிழ்வேந்தன் சென்னை மருத்துவமனைக்குச் செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலையில் வந்தார். அங்கு, தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் 4 மாடிக் கட்டடத்தின் உச்சிக்கு சென்றார். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் கட்டடத்தின் உச்சியிலிருந்துதிடீரென கீழே குதித்தார். இதில், பலத்த காயமடைந்தவர், அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை இளஞ்செழியன் அளித்த புகாரின் பேரில், அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.