தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற கல்லூரி மாணவர்களுக்கு அண்மையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
கடலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தூய.வளனார் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்த் துறைத் தலைவர் ம.வனத்தையன் தலைமை வகித்தார். இதில், பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கவிதைப் போட்டியில் நெய்வேலி ஜவஹர் கல்லூரி மாணவர் இரா.மணிகண்டன், குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரி மாணவி பா.தேவி, கடலூர் கே.என்.சி. கல்லூரி மாணவி இரா.கலைவாணி ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்தனர். கட்டுரைப் போட்டியில் தூய.வளனார் கல்லூரி மாணவர் அ.அரவிந்தன், குமாரபுரம் கிருஷ்ணசாமி கல்லூரி மாணவி வீ.வினிதா, புதுப்பாளையம் இமாகுலேட் கல்லூரி மாணவி அ.லாவண்யா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பேச்சுப் போட்டியில் குமாரபுரம் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவர் த.செல்வமணி, வடலூர் ஏரிஸ் கல்லூரி மாணவி இரா.கலைவாணி, கீழமூங்கிலடி ஸ்ரீராகவேந்திரா கல்லூரி மாணவி நா.கீர்த்தனா ஆகியோர் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனர். இவர்களுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வீதம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் ஜா.பீட்டர்ராஜேந்திரம் பரிசுத் தொகையை வழங்கினார்.