கொலை வழக்கில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உள்ளிட்ட 12 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள வடமூர் கிராமத்தில் குடிநீர்த் தொட்டி இயக்குபவராக பணிபுரிந்தவர் சம்பத்குமார் (40). இவரை கடந்த 26.02.2013 அன்று 14 பேர் கும்பல் அரிவாளால் வெட்டி, வீட்டை கொளுத்தி கொலை செய்தது.
சம்பவம் தொடர்பாக சிதம்பரம் தாலுகா போலீஸார் அதே கிராமத்தைச் சேர்ந்த அப்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் ஹேமலதா, ராமு (எ) ராமசாமி, அருண்குமார், சந்தோஷ்குமார், சசிகுமார், பாஸ்கர், விவேகானந்தன், சகஜானந்தம், பழனிச்சாமி, மதன்மோகன், அழகானந்தம், ராஜ்குமார், மோகன், மணிகண்டன் ஆகிய 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரில் ராமு (எ) ராமசாமி, பாஸ்கர் ஆகிய இருவரும் இறந்து விட்டனர். விசாரணை முடிவுற்று நீதிபதி சண்முகசுந்தரம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். அதில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஹேமலதா உள்ளிட்ட 12 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ஞானசேகரன் ஆஜரானார்.