கடலூர் மண்டல அளவிலான மகளிர் பூப்பந்து போட்டி சிதம்பரத்தில் நடைபெற்றது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின்கீழ் கடலூர் மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் பூப்பந்து போட்டி சிதம்பரம் கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. போட்டியில் இறுதிச் சுற்றில் இமாகுலேட் கல்லூரி அணியும், ஸ்ரீ ராகவேந்திரா கல்லூரி அணியும் மோதியதில், ராகவேந்திரா கல்லூரி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
திருவள்ளுவர் பல்கலைக்கழக கடலூர் மண்டல பெண்கள் விளையாட்டுப் போட்டி அமைப்பாளரும், உடல்பயிற்சி பேராசிரியருமான புவனேஸ்வரி, கடலூர் செயின் ஜோசப் கலை, அறிவியல் கல்லூரி உடல்பயிற்சி பேராசிரியர் ஆர்.ராஜமாணிக்கம் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியில் ராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரி தலைவர் டி.மணிமேகலை, செயலர் டி.வி.கே.பாபு, முதல்வர் மு.வரதராஜன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடல்பயிற்சி பேராசிரியர் ராஜ்மோகன், பயிற்றுநர்கள் சுரேஷ், பொன்பரமகுரு ஆகியோர் செய்தனர்.