சிதம்பரம் அருகே ஓங்கார ஆசிரமம் சார்பில் சாதுக்கள் ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அருகே உள்ள மஞ்சக்குழி கிராமத்தில் புதுச்சேரி ஓங்கார ஆசிரமத்தின் தலைமைத் துறவி லட்சுமிபாய் முக்தி பெற்று சமாதி அடைந்துள்ளார். இந்தப் பகுதிக்கு மகா கயிலாயம் என பெயர் சூட்டப்பட்டு 48-வது நாள் மண்டல பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. ஓங்கார ஆசிரிம மடாதிபதி சுவாமி ஓங்காரநந்தா முன்னிலையில் மண்டல பூஜை நடைபெறுகிறது.
திங்கள்கிழமை, திருவண்ணாமலையிலிருந்து வருகை தந்த 60 சாதுக்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. பி.முட்லூர் எம்ஜிஆர் சிலையிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு மஞ்சக்குழி மகா கயிலாயத்தை அடைந்தது. முன்னதாக மகா கயிலாயம் பகுதியில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆயுஷ் ஹோமம், மகா சண்டி யாகம் ஆகியவை நடைபெற்றன.
விழாவில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேவி பாராயணம் மற்றும் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து சிவபஞ்சாட்சர ஜபம், பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோட்டீஸ்வரானந்தா, முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் விளக்குபூஜை நடைபெற்றது.