தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் போராட்ட ஆயத்தக் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் வழங்கும் முறையை வணிக வங்கிகளுக்கு இணையாக எளிமைபடுத்திட வேண்டும் உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 17-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் கடன் வழங்கும் பணிகளை முற்றிலும் புறக்கணிக்கவும் சங்கத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கான ஆயத்தக் கூட்டம் கடலூர் நகர அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், சங்கத்தின் கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் செயலர்கள், ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு, கடலூர் மாவட்ட தலைவர் ஆர்.சாம்பசிவம் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் முத்துப்பாண்டியன், மாநில துணைத் தலைவர்கள் துரைக்கண்ணு, சங்கரன், மாநில இணைச் செயலர்கள் காமராஜ்பாண்டியன், செந்தில்குமார், மாநில பொருளாளர் சேகர், திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர்கள் ஆனந்தன், சேகர், ஏழுமலை, சாமியார், நாகராஜன், சேகர், கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சாம்பசிவம், சேகர், திருநாவுக்கரசு, லட்சமிநாராயணி, சீனுவாசன், செல்வம், பொன் சாந்தகுமார், சக்திவேல், மாரிமுத்து ஆகியோர் பேசினர்.