கடலூரில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை அமைச்சர் எம்.சி.சம்பத் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பமுற்ற பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் கர்ப்பிணிப் பெண்களை மொத்தமாக அழைத்து, அவர்களுக்கு சீர்வரிசைப் பொருள்கள் வழங்கி சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கடலூர் மாவட்டத்துக்கான இந்த விழாவை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வெள்ளிக்கிழமை கடலூரில் தொடக்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 400 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு அவர்களுக்கு சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன. விழாவில் கர்ப்பிணிகளுக்கு வளையல், புடவை, மஞ்சள், குங்குமம், பூ, பழ வகைகள் உள்பட 11 வகையான பொருள்கள் அடங்கிய சீர்வரிசைத் தட்டுகள் வழங்கப்பட்டன. மேலும், கர்ப்பிணிகளுக்கு 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. கர்ப்பக்கால பராமரிப்பு குறித்த விளக்கக் கையேடும் வழங்கப்பட்டது.
விழாவில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் த.பழனி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) எம்.கீதா, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ச.செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.