காடாம்புலியூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள பலாப்பழ கடைகளால் விபத்து அபாயம் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முந்திரி காடுகளுக்கு இடையிலும், கோப்புப் பயிராகவும், வரப்பு ஓரங்களிலும் சுமார் ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பலா மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றனர். மாநிலத்தின் இதர பகுதிகளில் விளையும் பலாப் பழங்களைக் காட்டிலும், பண்ருட்டியில் விளையும் பலாப் பழங்களுக்கு கூடுதல் சுவை உண்டு. இதனால் வியாபாரிகள் தேடிவந்து பலாப் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.
தற்போது, பலாப்பழம் அறுவடை தொடங்கி உள்ளது. இதனால், காடாம்புலியூரில், சென்னை }கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பலாப் பழத்தை ஆங்காங்கே குவித்து வைத்து பலர் வியாபாரம் செய்கின்றனர். நெடுஞ்சாலையில் பயணிப்போர் தங்களது கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு, பலாப் பழம் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்து அபாயம் தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: காடாம்புலியூரில், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பலாப் பழங்கள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் பழங்களை வாங்க விரும்புவோர் சாலையில் தங்களது வாகனத்தை நிறுத்திச் செல்கின்றனர். இதனால், போக்குவரத்து இடையூறு, வாகன நெரிசல் மற்றும் விபத்து அபாயம் தொடர்கிறது. மேற்கண்ட சாலையின் ஒரு பகுதியில் விரிவாக்கப் பணியும் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.