கடலூர் மாவட்டம், நெய்வேலியில் ரொளடி அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நெய்வேலி, 30-ஆவது வட்டம், கண்ணகி கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (27). தையல் கடையில் பணிபுரிந்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜேந்திரன் மகன் பிரசாந்த் (20). பெயிண்டர். அருள்ராஜ் அடிக்கடி பிரசாந்திடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இதனால், கோபமடைந்த பிரசாந்த் தனது நண்பர்களான மாந்தோப்புத் தெருவைச் சேர்ந்த ராமு மகன் மணி என்ற திவ்யபாரத் (22), அருந்ததியர் தெருவைச் சேர்ந்த நாயகன் மகன் பார்த்திபன் (21) ஆகியோருடன் இணைந்து அருள்ராஜை கொலைசெய்ய திட்டமிட்டார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அருள்ராஜ் தனது வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பிரசாந்த், திவ்யபாரத், பார்த்திபன் ஆகியோர் கருவேலம் கட்டையால் தாக்கியதில் அருள்ராஜ் பலத்த காயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அந்தப் பகுதியினர் அருள்ராஜை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.
இதுதொடர்பாக தெர்மல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரசாந்த், திவ்யபாரத், பார்த்திபன் ஆகியோரை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட அருள்ராஜின் பெயர் ரெளடிகள் பட்டியலில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.