சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சார்ந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயில்வோருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள், பிளஸ்1 வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி உதவித் தொகையானது மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். பள்ளிப் படிப்பு உதவித் தொகைக்கு வருகிற அக்.15-ஆம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு உதவித் தொகைக்கு அக்.31-ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம். இணையதள முகவரியில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.