கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பாரம்பரிய விதைத் திருவிழா அண்மையில் நடைபெற்றது.
செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம், கடலூர் மாவட்ட இயற்கை வேளாண்மை இயக்கம், தமிழ்க்காடு ஆகியவை சார்பில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த விதைத் திருவிழா நடைபெற்றது.
"ஆடிப் பட்டம் தேடி விதை' என்ற முதுமொழிக்கேற்ப ஆடி மாதத்தில் உழவர்கள் விதைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மரபு வகை விதைகளான நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, சாமை, தினை, நாட்டுக்காய்கறிகள், கீரை ஆகிய விதைகளின் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கோ.இரா.முருகன் தலைமை வகித்து, பாரம்பரிய விதைத் திருவிழாவைத் தொடக்கி வைத்தார். ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குநர் நாட்ராயன், வேளாண் அறிவியல் நிலையத் திட்ட இயக்குநர் சு.கண்ணன், முந்திரி ஆராய்ச்சி நிலையத் தலைவர் அ.மோதிலால், எழுத்தாளர் கண்மணி குணசேகரன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றுப் பேசினர்.
நிகழ்வில் ஓட்டயான், அறுபதாம் குறுவை, மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், கேழ்வரகு, கார் நெல், பால்குட வாழை உள்ளிட்ட பல்வேறு தானியங்கள் மற்றும் காய்கறி விதைகளின் விற்பனையும், இயற்கை உணவுகள், மூலிகைகள், உணவுப் பொருள்களின் கண்காட்சியும் நடைபெற்றது. விழாவின் நிறைவில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.