சிதம்பரம், அண்ணாமலைநகர் பேரூராட்சியில் எரிவாயு தகன மேடை புனரமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து பயன்பாட்டுக்காக தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி உதவி இயக்குநர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். சிதம்பரம் நகர்மன்ற முன்னாள் தலைவர் எம்.எஸ்.என்.குமார், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார், ஆவின் முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் முருகையன், பேரூர் கழகச் செயலர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கட்ரமணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் கலந்துகொண்டு, புனரமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடையை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: அண்ணாமலை நகர் பேரூராட்சியில் கடந்த 2013-ஆம் ஆண்டு ரூ.90 லட்சத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இதை புனரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. மேலும் இங்கு ரூ.17 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு வருகிறது.
எரிவாயு தகன மேடையை பராமரிக்கும் பணி திருவக்குளம் மக்கள் சமுதாய நலச் சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
என்றார் அவர்.