பண்ருட்டி அருகே கூழாங்கல் கடத்த முயன்ற இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கூழாங்கல் படிமங்கள் உள்ளன. இங்குள்ள கூழாங்கற்களை சிலர் கடத்தி விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. பண்ருட்டியைச் சேர்ந்த அரிராமச்சந்திரன் என்பவருக்கு செம்மேடு கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் உள்ள கூழாங்கற்களை மர்ம நபர்கள் அனுமதியின்றி சலித்து கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் மலர்விழி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது, அங்கு லாரியில் கூழாங்கற்கள் ஏற்றிக்கொண்டிருந்ததாக உளுந்தூர்பேட்டை மணிகண்டன் (38), வீரப்பெருமாநல்லூர் கணபதி (33) ஆகியோரை கைது செய்தனர். மேலும், லாரியில் 500 பைகளில் ஏற்றப்பட்டிருந்த கூழாங்கற்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நிலத்தின் உரிமையாளர் அரிராமச்சந்திரன், சாட்டமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கங்காசலம் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.