கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச ஓவியப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
முதல் நாளில் 30 மாணவ, மாணவிகள் ஓவிய பயிற்சியில் பங்கேற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை குறிஞ்சிப்பாடி அரசுப் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 43 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் செ.ஜெயரத்னா தலைமையில் ஓவியர் சு.மனோகரன் ஓவிய நுணுக்கங்கள் குறித்து பயிற்சி அளித்தார். அரிமா சங்க நிர்வாகி கே.திருமலை சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார். பறவைகள், இயற்கைக் காட்சிகள், மலர்கள், விலங்குகள் ஆகிய பிரிவுகளில் ஓவியங்களை எவ்வாறு வரைவது என்பதன் அடிப்படையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. வருகிற 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் 5 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பயிற்சி காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரையில் நடைபெறும்.
பயிற்சி நிறைவில் மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 86106 27168 என்ற எண்ணைத் தொடர்புக் கொள்ளலாம்.