ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என நுகர்வோர் சங்கம் வலியுறுத்தியது.
கடலூர் மாவட்ட நுகர்வோர் அமைப்புகளின் காலாண்டுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ஜெயமணி மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடலூர் நகரில் ஆட்டோ கட்டணம் அதிகமாக முறையில் வசூல் செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை முன்பைவிட, ரூ. 10 வரை குறைந்துள்ள நிலையில், தற்போதும் அதிகமான அளவுக்கு ஏற்கெனவே இருந்ததை விட, அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆட்டோவில் பயணம் செய்வோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் குறைவான அளவுக்கே கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அட்டைதாரர் அனைவருக்கும் தேவையான முழு அளவையும் வழங்க வேண்டும்.
கடலூர் நகரம், அருகே உள்ள கோண்டூர் ஊராட்சிப் பகுதிகளில் வடிகால் அமைக்கப்பட்ட போதும், அதை மூடவில்லை. இதனால், திறந்த நிலையில் உள்ள வடிகால்களில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி, பல்வேறு நோய்களுக்கு மனிதர்கள் ஆளாகி வருகின்றனர். எனவே, கால்வாய்களை விரைந்து மூடுவதுடன், முறையாக கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.