காதல் திருமணம் செய்தவர் மர்மச் சாவு: உறவினர்கள் சாலை மறியல்
பெண்ணாடம் அருகே காதல் திருமணம் செய்த இளைஞர், மகாராஷ்டிரம் மாநிலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி வட்டம், இறையூர் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி மகன் பரந்தாமன் (25). இவர் மதுரை மாவட்டம், முத்தையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்தார். இந்த நிலையில், அந்தப் பெண்ணின் பெற்றோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். அதில், தங்களது பெண்ணுக்கு 18 வயது நிறைவடையவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தின்கீழ் (போக்úஸா) பரந்தாமனை மதுரை மாவட்டம், சிந்துப்பட்டி போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
பின்னர், கடந்த டிச. 25-ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர், சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை மகாராஷ்டிரம் மாநிலம், புனே காவல் துறையினர் பரந்தாமனின் பெற்றோரைத் தொடர்புகொண்டு, அவர் அங்குள்ள தனியார் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இந்தச் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பரந்தாமனின் உறவினர்கள், கிராம மக்கள் திட்டக்குடி- விருத்தாசலம் சாலையில் இறையூர் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இதையடுத்து, திட்டக்குடி வட்டாட்சியர் கண்ணன், விருத்தாசலம் கோட்ட உதவி கண்காணிப்பாளர் தீபா சத்தியன் ஆகியோர் விரைந்து வந்துகிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் அந்தப் பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
சாலையின் இருமருங்கிலும் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் நின்றன.