கடலூரில் முறையாக வரி செலுத்தாத கடைகள், வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு வெள்ளிக்கிழமை துண்டிக்கப்பட்டது.
கடலூர் பெருநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தாத கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் ஆகியவற்றின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்குமாறு பெருநகராட்சி ஆணையர் (பொறுப்பு) க.பாலு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், நகராட்சி மேலாளர் பழனி தலைமையில் வருவாய் அலுவலர் சுகந்தி, வருவாய் ஆய்வார்கள் ஹரிஷ் குமார், கதிரவன், காதர் நவாஸ், பில் கலெக்டர்கள் சீனுவாசன், கருணாகரன், லட்சுமணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வெள்ளிக்கிழமை கடலூர் நேதாஜி சாலையில் உள்ள 2 கடைகள், தெற்கு மற்றும் வடக்கு கவரை தெருக்களில் உள்ள 4 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.
நேதாஜி சாலையில் உள்ள கடைகளின் குடிநீர் இணைப்பை துண்டிக்கும்போது வணிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் சொத்துவரி செலுத்தப்படாததை சுட்டிக்காட்டிய நகராட்சி அலுவலர்கள் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். ரூ.2 லட்சம் வரை குடிநீர், சொத்து வரி செலுத்தாத காரணத்தால் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக தெரிவித்த நகராட்சி அதிகாரிகள், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறினர்.