கடலூரில் ரூ.9 லட்சம் மோசடி தொடர்பாக உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் கோண்டூரைச் சேர்ந்தவர் ரா.கார்த்திகேயன் (42). அதேப் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவரிடம் புதுவை மாநிலம் குருவிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பக்கிரி மகன் முருகன் (37) சமையலராக வேலைபார்த்து வருகிறார். தனது ஊதியத்தின் ஒருபகுதியை வீடு வாங்குவதற்கு சேமிக்கும் நோக்கத்துடன் கார்த்திக்கேயனிடம் முருகன் கொடுத்து வந்தாராம். இதுவரை ரூ.9 லட்சம் சேர்ந்துள்ள நிலையில் வீடு வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், கார்த்திகேயன் வீடு வாங்கித் தராததோடு, பணத்தையும் திருப்பித் தரவில்லையாம். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் முருகன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை திங்கள்கிழமை கைது செய்தனர்.