மாணவர் விஞ்ஞானி பயிற்சி முகாம்
நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியில் இளம் மாணவர் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், இளம் மாணவர் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்-2018, நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியில் கடந்த 15 நாள்களாக நடைபெற்றது. இந்த முகாமில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த அரசுப் பள்ளிகளிலிருந்து 9-ஆம் வகுப்பு மாணவர்கள் 83 பேர் பங்கேற்றனர்.
பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். ஜவஹர் கல்விக் கழகச் செயலர் எஸ்.ஞானசம்பந்தம் தலைமை வகித்துப் பேசினார். கல்லூரி முதல்வர் வெ.தி.சந்திரசேகரன் வரவேற்றார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஆளவந்தான் முகாம் அறிக்கையை வாசித்தார். சுரங்க செயல் இயக்குநர் ஹேமந்த் குமார் கெளரவ விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட என்எல்சி நிறுவன மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன், அறிவியல் கண்காட்சியைப் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டி சான்றுகளை வழங்கிப் பேசினார். ஜவஹர் கல்லூரி பொருளாளர் டி.தனபால், செயலர் எம்.முகமதுஅப்துல் காதர், என்எல்சி அதிகாரிகள் செல்வம், மூர்த்தி, சுப்பாராவ், கருப்பையா, மதிவாணன், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை பேராசிரியர் உமாபதி தொகுத்து வழங்கினார்.