ரூ.1.65 கோடி மோசடிப் புகாரில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் சி.வடிவேல் (54). என்எல்சி உள்பட பல்வேறு நிறுவனங்களில் ஒப்பந்தப் பணிகளை எடுத்து வேலை செய்து வருகிறார். இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்தவரும், சக ஒப்பந்ததாரருமான ஆராவமுதன் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ரூ.2.50 கோடி கடனாகப் பெற்றாராம். இவருக்கு கோவை மாவட்டம், கூடலூரில் சொத்து இருப்பதாகவும், அந்த சொத்து தற்போது வங்கியில் ஏலம் விடப்படும் நிலையில் இருப்பதால் ரூ.2.50 கோடி கடனாக தர வேண்டுமெனவும் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வடிவேல் ரூ.2.50 கோடி கடன் வழங்கினாராம். இதில் ஆராவமுதன் ரூ.85 லட்சத்தை திருப்பிச் செலுத்தினாராம். எஞ்சிய தொகையான ரூ.1.65 கோடிக்கு காசோலை வழங்கினாராம். அந்த காசோலையை வங்கியில் பணமாக்க முயன்றபோது போதிய பணமில்லாமல் திரும்பியதாம். இதுதொடர்பாக ஆராவமுதனிடம் கேட்டபோது அவர் வடிவேலை திட்டியதோடு கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
இதையடுத்து, கடலூர் மாவட்ட குற்றப் பிரிவில் வடிவேல் அண்மையில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் ஆராவமுதனின் மகன் மோகன் என்ற மோகன்ராஜ் (39), குறிஞ்சிப்பாடி வானதிராயபுரத்தைச் சேர்ந்த செட்டிமுருகன் (55) ஆகியோரை புதன்கிழமை கைதுசெய்தனர்.