தேசிய அளவிலான கட்டுரைப் போட்டியில் கடலூர் மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
இந்தியா மற்றும் பூட்டானுக்கான ஐக்கிய நாடுகளின் தகவல் மையம், ஸ்ரீராமசந்திரா மிஷன் மற்றும் இதய நிறைவு கல்வி அறக்கட்டளை இணைந்து அகில இந்திய அளவிலான கட்டுரைப் போட்டியை கடந்த ஆகஸ்டு மாதம் நடத்தின. இந்தப் போட்டியில் கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளிலிருந்து 160 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், தமிழ்நாடு அளவில் இந்தி மொழியில் கடலூர் இமாகுலேட் மகளிர் கல்லூரி மாணவி எஸ்.சோனல் 3-ஆவது இடத்தைப் பிடித்தார். கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மாணவி எஸ்.ரித்திகா தமிழிலும், கடலூர் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவி கே.பரணிஸ்ரீ ஆங்கிலத்திலும் மாநில அளவில் 9-ஆவது இடத்தைப் பிடித்தனர். மாநில அளவில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் வி.வெற்றிவெல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பரிசு, சான்றிதழை வழங்கிப் பேசினார். ஸ்ரீராமசந்திரா மிஷன் மற்றும் இதய நிறைவு கல்வி அறக்கட்டளை மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏ.ஆர்.சித்தானந்தம் நிகழ்ச்சி குறித்து விளக்கினார். பயிற்றுநர் கணேசன், மூத்த பயிற்றுநர் ஜி.ஆர்.வேலாயுதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் தி.அருள்செல்வம் வரவேற்க, பயிற்றுநர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.