மணல் குவாரி அமைக்கக் கோரி, விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி, மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விருத்தாசலம் அருகே மணிமுக்தாற்றில் மணவாள நல்லூரில் இயங்கி வந்த மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி மூடப்பட்டதாம். எனவே, புதியதாக வி.குமாரமங்கலத்தில் மணல் குவாரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிர்வாகி திருமால் தலைமையில் மனு அளித்தனர். அப்போது, அவர்கள் தங்களது வாயில் துணியை கட்டிக் கொண்டு சார்-ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்திடம் மனு அளித்தனர்.