திட்டக்குடி வட்டம், பட்டூரில் மது அருந்த பணம் தராததால், தீக்குளித்தவர் உயிரிழந்தார்.
பட்டூரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் பூவரசன் (20). சிறுவயதிலேயே இவரது தந்தை இறந்ததால், அதே பகுதியைச் சேர்ந்த அவரது தாய்மாமன் செ.பால்ராஜின் (40) வீட்டில் வசித்து வந்தார். விவசாயக் கூலி வேலை செய்து வந்த பூவரசன், மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானதாகத் தெரிகிறது.
இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது பாட்டி ராசாத்தியிடம் மது அருந்த பணம் கேட்டாராம். அவர், பணம் தர மறுத்ததால், வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு, தீ வைத்துக் கொண்டாராம்.
இதனால், பலத்த தீக்காயமடைந்த அவரை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆவினங்குடி போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு, செய்து விசாரித்து வருகின்றனர்.