நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வலியுறுத்தினார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு கடலூர் ஊராட்சி ஒன்றியம் கிழ்அழிஞ்சிப்பட்டு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பார்வையாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நிகழாண்டு பருவமழை வழக்கத்தைவிட குறைவாக பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீரினை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
நெகிழி (பிளாஸ்டிக்) உபயோகத்தை முற்றிலுமாக தவிர்த்து தமிழகத்திலேயே கடலூர் மாவட்டம் நெகிழி உபயோகமில்லா மாவட்டமாக திகழ்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டி அதனை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பயன்படுத்த வேண்டும். கிராமத்தை தூய்மையாக பராமரிப்பதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்புடன் செயல்படவேண்டும் என்றார் அவர். பின்னர், வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போது, வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணிப் பைகளை பொதுமக்களுக்கு ஆட்சியர் வழங்கினார்.