பண்ருட்டி அருகே மணல் கடத்தியதாக 10 மாட்டு வண்டிகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி வட்டத்தில் காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகப் பகுதிகளில் அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்லப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காடாம்புலியூர் மற்றும் முத்தாண்டிக்குப்பம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு, திங்கள்கிழமை அதிகாலை முறையே ரெட்டிப்பாளையம், சாத்திப்பட்டு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அரசு அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்ததாக நன்னிக்குப்பம் செல்வகுமார் (32), முருகவேல் (48), அருள் (40), கமலக்கண்ணன் (35), ஆறுமுகம் (58), காட்டுக்கூடலூர் ரவிச்சந்திரன் (46), நடுசாத்திப்பட்டு ஜான்பீட்டர் (28), கொட்டிகோணாங்குப்பம் கார்த்திகேயன் (36), செல்வராஜ், சிறிய சரக்கு வாகனத்தில் மணல் ஏற்றி வந்த காசிநாதன்(61) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.மேலும், தப்பியோடிய நன்னிக்குப்பம் கணபதி, அருணகிரி ஆகியோரைத் தேடி வருகின்றனர்.