மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தாய் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மந்தாரக்குப்பம், பெரியாக்குறிச்சி பகுதியில் வசிப்பவர் கஜலட்சுமி (52). இவரது மகள் மகாலட்சுமிக்கும் (26), நெய்வேலி, வட்டம் 21, ஏடிஎஸ் தெருவில் வசிக்கும் அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் செந்திலுக்கும் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாம்.
தம்பதிக்குள் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுமாம். செவ்வாய்க்கிழமை மாலை கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், மகாலட்சுமி அறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டு தூக்கிட்டுக் கொண்டாராம். அவரை உறவினர்கள் மீட்டு, என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து கஜலட்சுமி அளித்த புகாரின் பேரில், தெர்மல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.