கடலூர் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடலூர் திருப்பாதிரிபுலியூரில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற வரதராஜப் பெருமாள் கோயில். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில், ஆனி பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை 7.30 மணிக்கு வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜையுடன் வேத மந்திரங்கள் முழங்கிட கோயில் கொடிமரத்தில் திருக்கோயில் பட்டர் தி.தேவநாதன் கொடியேற்றி வைத்தார்.
இதையடுத்து, சுவாமி உபநாச்சியாருடன் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. இரவில், ஹம்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளில் கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி, தக்கார் கு.சுபத்ரா, எழுத்தர் வி.ஆழ்வார் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
விழா நாள்களில் காலை, மாலை வேளைகளில் சூரியபிரபை, சந்திரபிரபை, யானை, சேஷ வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
11-ஆம் தேதி ஆனி தங்க கருட வாகனத்தில் மகோற்சவமும், 12-ஆம் தேதி துவாதச ஆராதனைத் திருவிழாவில் காலையில் திருமஞ்சனமும் நடைபெறுகிறது.
13-ஆம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவுபெறுகிறது.