திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உரிய அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் சாகுல்அமீது, திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.
அதில் தெரிவித்துள்ளதாவது: திட்டக்குடி அரசு மருத்துவமனையில் போதிய அடிபடை வசதிகள் இல்லாததால் நோயாளிகள், பார்வையாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, கழிப்பறை வசதி, மின் விளக்குகள் வசதி போதிய அளவில் இல்லை. மேலும், பிணவறைக்குச் செல்லும் வழியில் கூட மின் விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் அந்தப் பகுதிக்குச் செல்வதற்கு ஊழியர்களே அச்சடைகின்றனர். எனவே,அரசு மருத்துவமனையை வட்டாட்சியர் ஆய்வுசெய்து தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.