மனித குலத்தின் மேன்மைக்கு வாசிப்பு அவசியமானது என்று தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கமலா சங்கரன் கூறினார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் 22-ஆவது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்தக் கண்காட்சியின் 8-ஆம் நாள் நிகழ்வாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் (சுரங்கங்கள்) ஹேமந்த்குமார் தலைமை வகித்துப் பேசியதாவது:
தொடக்க காலத்தில் 20 பதிப்பகத்தாரின் பங்களிப்போடு நடைபெற்ற இந்த புத்தகக் கண்காட்சி, தற்போது 120-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தார் பங்குபெறும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இலவசமாக கண்காட்சியைப் பார்வையிட ஏற்பாடு செய்துள்ளோம் என்றார் அவர்.
விழாவில், முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கமலா சங்கரன் பேசியதாவது: சட்டப் படிப்பு பயில வரும் மாணவர்களிடம்கூட வாசிக்கும் பழக்கம் குறைந்துள்ளதை உணர முடிகிறது.
அதேநேரத்தில், செல்லிடப்பேசி மூலம் விளையாடும் பழக்கம் அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது. இதை மாற்றிக்கொண்டு புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். மனித குலத்தின் மேன்மைக்கு வாசிப்பும், எழுத்துமே முக்கியமானது.
போட்டித் தேர்வுகளில் பங்கேற்க விரும்புவோர் அதிக
புத்தகங்களைப் படித்தால்தான் வெற்றி பெற முடியும் என்றார் அவர்.
மேலும், என்எல்சி இந்தியா நிறுவனம் தற்போது பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் வாய்ப்பை கல்லூரி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியில், பாராட்டப்படும் எழுத்தாளர்கள் வரிசையில் பா.முத்துக்குமாரசுவாமியும், பாராட்டப்படும் பதிப்பாளர்கள் வரிசையில் மதுரை மீனாட்சி புத்தக நிலையம் அருணாசலமும் பாராட்டப்பட்டனர்.
விழாவில், ஜெ.டி.எஸ்.கலைச்செல்வி எழுதிய "அம்புகள்' என்ற நூல் வெளியிடப்பட்டது. முன்னதாக, என்எல்சி துணைப் பொது மேலாளர் சி.சீராளச்செல்வன் வரவேற்றார்.
கலை நிகழ்ச்சியில் நவஜோதி குழுவினரின் பாட்டுக்குப் பாட்டு, பாட்டு மன்றம் நடைபெற்றது.