கடலூரில் தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையார் இயக்கம் சார்பில் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவர் சீனுவாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ராஜாமணி வரவேற்றார். மாநில பொதுச் செயலர் விருதை காந்தி, பொதுநல இயக்கக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார், மக்கள் அதிகாரம் பாலு, ஏஐடியூசி சேகர், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்க மாநிலச் செயல் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையார் இயக்கத்தின் மாநிலத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் பேசியதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. பொருளாதார வரையறை நிலையானதல்ல. அது மாறுதலுக்கு உள்பட்டது. சமூகம், கல்வி, வேலைவாய்ப்புகளில் பின்தங்கிய, மிகவும் பின் தங்கிய மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்காகவே இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.
உயர்சாதி ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால் நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்கலாம். கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு கடனுதவி திட்டங்களைச் செயல்படுத்தலாம்.
தமிழகத்தில் 90 சதவீதம் பேர் பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய, பட்டியல் இனத்தவர்கள் பிரிவில் உள்ளனர். அவர்களில் ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வருமானத்தை ஈட்ட முடியாதவர்கள் உள்ளனர். எனவே, தமிழகத்தில் உயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது. மீறி அமல்படுத்த முயன்றால், தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடும், சமூக நீதியும் சிதைக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, இந்த இட ஒதுக்கீட்டை கைவிடுவதுடன், மத்திய அரசின் முக்கிய துறைகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, ஆகஸ்ட் 16-ஆம் தேதி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அவர். இயக்கத்தின் மாவட்டப் பொருளாளர் விவேகானந்தம் நன்றி கூறினார்.