கடலூரில் சிறந்த பள்ளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை மூலம் செயல்படுத்தப்படும் "பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 2018-19-ஆம் கல்வி ஆண்டில், மாணவர்களின் கற்றல் திறனில் முதன்மையுடனும், பள்ளி வளர்ச்சிக்காக சிறந்த செயல்பாடுகளையும் வெளிப்படுத்திய பள்ளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, கடலூரில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஒன்றியம் வாரியாக 56 சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், மங்கலம்பேட்டை ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் நடுநிலைப் பள்ளி சிறந்த நடுநிலைப் பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது. பள்ளிக்கான விருதை முதன்மை கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம் வழங்க, பள்ளித் தலைமையாசிரியர் த.உத்திராபதி பெற்றுக் கொண்டார்.
விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் செல்வக்குமார், வட்டாரக் கல்வி அலுவலர்கள் தமிழ்ச்செல்வி, கலைச்செல்வி, வட்டார வள மைய கண்காணிப்பாளர் நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.