விபத்தைத் தடுக்கும் வகையில் மேலும் 41 இடங்களில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் 5 முக்கியச் சாலைகள் உள்ளன. இங்கு, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகளாக 91 இடங்கள் கண்டறியப்பட்டன.
அந்த வகையில், விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலையில் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தில் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் ரூ. 19 லட்சத்தில் 50 இடங்களில் இந்த விளக்குகளைப் பொருத்தியுள்ளோம்.
திருச்சி - சென்னை சாலை, வேப்பூர் - கடலூர் சாலையில் இந்தப் பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. மீதமுள்ள 41 இடங்களிலும் எச்சரிக்கை விளக்குகள், சிக்னல்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு ரூ. 15 லட்சம் வரை செலவாகும் என்றார் அவர்.