பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 3-ஆம் நாள் ஜமாபந்தியில் 201 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில்
கடந்த 11-ஆம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் 3-ஆம் நாள் ஜமாபந்தி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நெல்லிக்குப்பம் குறுவட்டத்தைச் சேர்ந்த எய்தனூர், சுந்தரவாண்டி, அரியிருந்தமங்கலம், வைடப்பாக்கம், குடிதாங்கி, கீழ்கவரப்பட்டு, மேல்குமாரமங்கலம்(வடக்கு) மற்றும் (தெற்கு), எழுமேடு, திருக்கண்டேஸ்வரம், சோழவல்லி, கீழ்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து 201 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பெற்றுக்கொண்டார்.
மனு அளித்தவர்களில் 4 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை, 4 பயனாளிகளுக்கு விதவை உதவித் தொகைக்கான ஆணைகளை ஆட்சியர் வழங்கினார். மேலும், 2 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், ஒரு பயனாளிக்கு பட்டா நகலையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பண்ருட்டி வட்டாட்சியர் கீதா, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.