விழுப்புரத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலரின் கார், மோட்டார் சைக்கிள்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள மேற்கு விஜிபி நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி.
விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக உள்ளார். விஜிபி நகரில் தனது வீட்டின் எதிரே உள்ள நகராட்சித் திடல் பகுதியில், மரத்தின் அடியில் காரையும், 2 மோட்டார் சைக்கிள்களையும் குப்புசாமி நிறுத்தி வைத்திருந்தார்.
சனிக்கிழமை அதிகாலை இவரது கார், மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன (படம்). தகவலறிந்து அங்கு வந்த விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். எனினும், காரும், மோட்டார் சைக்கிள்களும் தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்தன. இவற்றில் தீப்பிடித்தபோது உயரமாக தீப்பிழம்பு உருவானதால், மரத்தின் கிளைகளும் கருகின.
இதுகுறித்து குப்புசாமி அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராஜன், உதவி ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர் என்ற ரீதியில், அலுவல் பணி காரணமாக, குப்புசாமிக்கு வேண்டாத நபர்கள் முன்விரோதத்தில் அவரது கார், மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தனரா அல்லது கார் பேட்டரியிலிருந்து எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து வாகனங்கள் எரிந்தனவா என்பது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.