வீராணம் ஏரிக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது. அதிலிருந்த இருவர் உயிர் தப்பினர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ளது வீராணம் ஏரி. கோடைகாலத்தை முன்னிட்டு சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்ப ஏதுவாக வீராணம் ஏரியில் அதன் உச்ச நீர்மட்டமான 47.50 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் தனது நண்பருடன் பணி நிமித்தமாக காட்டுமன்னார்கோவிலுக்கு வந்தார். பின்னர், அங்கிருந்து காரில் சென்னைக்கு புறப்பட்டவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் வீராணம் ஏரிக்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். கலியமலை என்ற இடத்தில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் வீராணம் ஏரிக்குள் பாய்ந்தது. ஏரி நீரில் கார் முழ்கத் தொடங்கியது.
இதையடுத்து, காரிலிருந்த இருவரும் அதிலிருந்து வெளியேறி நீச்சலடித்து உயிர் தப்பினர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியிலிருந்து கார் மீட்கப்பட்டது.