குடிநீர் திருட்டில் பயன்படுத்தப்பட்ட மின் மோட்டார்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சிகள் அளவில் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தனிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் மின் மோட்டார்கள் மூலம் குடிநீரை உறிஞ்சி வருபவர்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, புதன்கிழமை கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகலா, கங்கா, ஊராட்சி செயலர் வேல்முருகன் ஆகியோர் கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட விஜய லட்சுமி நகர், சண்முகா நகர் குடியிருப்பு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, பத்துக்கு மேற்பட்ட வீடுகளில் குடிநீர் குழாயில் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு குடிநீர் திருடப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.