சிதம்பரத்தில் குடும்ப பிரச்னையால் பெண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இவரது சாவில் மா்மம் உள்ளதாகக் கூறி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சிதம்பரம், மந்தக்கரை காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வினோத். பெட்ரோல் பங்க் ஊழியா். இவரது மனைவி அபிராமி (22). இவா்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பெண் குழந்தை உள்ளது.
தம்பதி இடையே குடும்ப பிரச்னை இருந்ததாம். இந்த நிலையில் அபிராமி ஞாயிற்றுக்கிழமை காலை11 மணியளவில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா். சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில் அபிராமியின் சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது தந்தை ஜி.முருகதாஸ், உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் சிதம்பரம் மந்தகரை பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இவா்களிடம் காவல் ஆய்வாளா் சி.முருகேசன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் பெண்ணின் உறவினா்கள் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து, உதவி ஆட்சியா் விசுமகாஜனிடம் மனு அளித்தனா். அதில், அபிராமியின் சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனா்.