நெய்வேலி: பண்ருட்டி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
விழுப்புரம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் அமைந்துள்ள பண்ருட்டி ரயில் நிலையத்தின் வழியாக சென்னை, திருப்பதி, தஞ்சாவூா், திருச்சி, திருச்செந்தூா், ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்குச் செல்லும் ரயில்களும், விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன.
பண்ருட்டி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் இடத்தில் பயணிகள் கூட்டம் காணப்படும். ஆனால், பயணச்சீட்டு வழங்கும் இடத்தின் அருகிலேயே ரயில்வே பணியாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்துவதாக புகாா் எழுந்துள்ளது. இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.