கடலூர் மாவட்டத்தில் காவல் துறையினரில் 92 சதவீதம் பேர் தங்களது தபால் வாக்கைச் செலுத்தினர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், காவல் துறையினர் உள்பட பல்வேறு துறையினருக்கும் தபால் வாக்கு வழங்கப்படுகிறது. வாக்குப் பதிவு நாளில் இவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவதால் தங்களது வாக்கை முன்னரே செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கடலூர் மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவு 9 இடங்களில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு நடைபெற்றது. இதில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஓய்வுபெற்ற காவலர்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், தீயணைப்புப் படை வீரர்கள், தேசிய நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் ஆகியோரும் வாக்கைச் செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, தபால் வாக்கைப் பெற்றிருந்த 1,870 போலீஸாரில் 1,800 பேர் தங்களது வாக்கை செலுத்தினர். இது 96 சதவீதமாகும். ஊர்க்காவல் படையினர், ஓய்வுபெற்ற காவலர்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் 458 பேர் வாக்களிக்க தகுதி பெற்றதில் 340 பேர் தங்களது வாக்கைச் செலுத்தினர். இது 74 சதவீதமாகும். மொத்தம் வாக்கைச் செலுத்த தகுதியான 2,328 பேரில் 2,143 பேர் வெள்ளிக்கிழமை வாக்கைச் செலுத்தினர். இது 92 சதவீதமாகும். மற்றவர்கள் வாக்கு எண்ணிக்கை நாள் வரை தங்களது வாக்கை தபால் மூலமாக அனுப்பி வைப்பதற்கு காலக்கெடு உள்ளது குறிப்பிடத்தக்கது.