அயன்குறிஞ்சிப்பாடியில் அறுவடை திருவிழா நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி வட்டம், அயன்குறிஞ்சிப்பாடி கிராம உழவர் மன்ற விவசாயிகள் கடந்த 4 ஆண்டுகளாக புதிய முறையில் எள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், ஒரு அடிக்கு ஒரு அடியில் பார் பிடித்து செடிக்குசெடி இடைவெளி வரும்படி எள்ளை, கைகளால் ஊன்றி பயிர் செய்து அதிக விளைச்சலை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு விருத்தாசலம் மண்டல ஆராச்சி நிலையம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு வயல்வெளி அறுவடை திருவிழாவை அயன்குறிஞ்சிப்பாடியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக விவசாயிகளிடம் ஆலோசனை நடத்துவதற்காக அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், முனைவர்கள் நடராஜன், மருதாச்சலம், வேங்கடலட்சுமி ஆகியோர் எள் வயல்வெளிகளை பார்வையிட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்த நிகழ்வில் முன்னோடிவிவசாயிகள் வைத்தியநாதன், குப்புசாமி, தண்டபாணி, ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.