கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட படிப்புகளுக்கு இணையம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் 2019-20-ஆம் ஆண்டுக்கான இளம் அறிவியல் வேளாண்மை B.Sc., (Hons.) in Agriculture, இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி) (B.Sc., (Hons.) in Agriculture (Self Supporting), இளநிலை அறிவியல் தோட்டக்கலை (B.Sc., (Hons.) in Horticulture), பட்டயப் படிப்பு வேளாண்மை/தோட்டக்கலை, இளநிலை மருந்தாக்கியல் பட்டப்படிப்பு (B.Pharm.), இளநிலை அறிவியல் செவிலியர் (B.Sc., Nursing), இளநிலை இயற்பியல் சிகிச்சை (BPT), இளநிலை தொழில்முறை சிகிச்சை (BOT), இளநிலை மீன்வள அறிவியல் (B.F.Sc.) மற்றும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகளுக்காக மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் (On-line) 15-04-2019 முதல் 31-05-2019 வரை விண்ணப்பம் பதிவு செய்யும் நடைமுறையை பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பதிவாளர் மு.இரவிச்சந்திரன், மொழிப்புல முதல்வர் வி.திருவள்ளுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாணவர் சேர்க்கை ஆலோசகர் டி.ராம்குமார் செய்திருந்தார்.
பின்னர் துணைவேந்தர் கூறியதாவது:
மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும், தமிழக அரசின் மேல்நிலை படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும்.
சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இணையவழி பதிவுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணைய தள முகவரியை தொடர்புகொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு auadmissions2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும், உதவி மைய தொலைபேசி எண்ணையும் (04144-238349) தொடர்புகொள்ளலாம்.
இதற்கான சிறப்பு சேவை மையம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.