சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை முன்னாள் தலைவர் வி.தானுவலிங்கம் எழுதிய, "சேக்கிழாரின் பெரியபுராணம் - அறுபத்துமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு' என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா பல்கலைக்கழக லிப்ரா அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் வே.முருகேசன் தலைமை வகித்து நூலை வெளியிட, முதல் நூலை பதிவாளர் எம்.ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.
துணைவேந்தர் வே.முருகேசன் பேசுகையில், பேராசிரியர் தானுவலிங்கத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் சைவக் குரவர்களை உலகெங்கும் எடுத்துச் செல்லும் என்று பாராட்டினார்.
பதிவாளர் ரவிச்சந்திரன் பேசுகையில், இந்த நூல் சைவ இலக்கிய உலகில் கலங்கரை விளக்கமாக திகழும் என்றார்.
முன்னதாக, ஆங்கிலத் துறைத் தலைவர் கே.ராஜாராமன் வரவேற்றார். நுண்கலைப் புல முதல்வர் கே.முத்துராமன், பேராசிரியர்கள் டி.சண்முகம், சி.சந்தோஷ்குமார், எஸ்.ஐயப்பராஜா, எஸ்.புவனேஸ்வரி மற்றும் ஆர்.விஜயா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நூலாசிரியர் தானுவலிங்கம் ஏற்புரை நிகழ்த்தினார். ஆங்கில இலக்கிய மன்ற செயலர் எஸ்.கார்த்திக்குமார் நன்றி கூறினார்.