கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சுமார் ரூ.7 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறுகிறது. தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் மாவட்டத்திலுள்ள 141
டாஸ்மாக் மதுக் கடைகளுக்கும் 3 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் வாக்குப் பதிவு நாளான வியாழக்கிழமை வரை டாஸ்மாக் கடைகள், பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்படி, செவ்வாய்க்கிழமை அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. எனினும், கடந்த திங்கள்கிழமையன்று இரவு வரை மாவட்டத்தில் உள்ள 141 மதுக் கடைகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.6.89 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூ.4.32 கோடிக்கும், சனிக்கிழமை ரூ.3.46 கோடிக்கும் மது விற்பனையானது.
தற்போது மக்களவைத் தேர்தல் நேரம் என்பதால் ஏப்ரல் மாதத்தில் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. மார்ச் மாதத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.2.30 கோடிக்கு விற்பனையான மது பானம், தேர்தல் நேரமான ஏப்ரல் மாதத்தில் ரூ.3.50 கோடி என்ற அளவில்
உயர்ந்தது. தற்போது உச்ச அளவாக ரூ.6.89 கோடியை எட்டியுள்ளது. மதுக் கடைகளுக்கு 3 நாள்கள் தொடர் விடுமுறை என்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.