சிதம்பரம் சுப்பிரமணியர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வல்லபி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை (ஏப்.15) விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை வரை 3 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஏப்.17-ஆம் தேதி காலை நான்காம் கால யாகசாலை பூஜை, விசேஷ திரவிய ஹோமங்கள், மகாபூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றன.
பின்னர், யாகசாலையிலிருந்து கலச நீர் ஊர்வலம் புறப்பட்டு கோயில் விமானத்தை அடைந்து காலை 9.45 மணிக்கு கோயில் விமான கலசத்துக்கு புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர், மகாதீபாராதனை நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி மற்றும் பழங்குடியினர் நிதி பரிந்துரை கமிட்டி உறுப்பினர் தில்லை சீனு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். மாலையில் வல்லபி மாரியம்மனுக்கு மகாபிஷேகம் மற்றும் வீதிஉலா நடைபெற்றது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் கே.நடராஜன், எஸ்.நடேச குருக்கள், எஸ்.பாலசுப்பிரமணிய குருக்கள் மற்றும் பொதுமக்கள், இளைஞரணியினர் செய்திருந்தனர்.