நஷ்ட ஈடு வழங்காததால் காப்பீட்டு நிறுவனத்தில் ஜப்தி
By DIN | Published On : 23rd August 2019 07:56 AM | Last Updated : 23rd August 2019 07:56 AM | அ+அ அ- |

நஷ்ட ஈடு வழங்காத காப்பீட்டு நிறுவனத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலூர் வில்வநகரைச் சேர்ந்தவர் கி.பெருமாள், தேசிய மாணவர் படை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 6.10.2000 அன்று தனது மோட்டார் சைக்கிளில் கடலூர் கடற்கரைச் சாலையில் சென்ற போது, கார் மோதியதில் காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிந்தார்.
எனவே, விபத்து இழப்பீடு கோரி அவரது மனைவி சாந்தி கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதில், சாந்தி குடும்பத்தினருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 22.40 லட்சத்தை வழங்க வேண்டும் என 2008 -ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இந்தத் தொகை வழங்கப்படாததைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இதையடுத்து, உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காத காப்பீட்டு நிறுவனத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, கடலூர் மஞ்சக்குப்பத்திலுள்ள அரசுடைமையாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் வியாழக்கிழமை முதுநிலை கட்டளை நிறை வேற்றுபவர் ஆர்.ஜெயக்குமார் மற்றும் சாந்தி தரப்பினர் சென்று ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.