சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 90-ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, யோகக் கல்வி மையம் சார்பில், "யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' என்ற தலைப்பில் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை, பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். யோக மைய இயக்குநர் கி.வெங்கடாஜலபதி வரவேற்றார். கல்வியியல் புல முதல்வர் ஆர்.ஞானதேவன் தலைமை வகித்துப் பேசினார்.
துணைவேந்தர் வே.முருகேசன் பேசுகையில், வாழ்வியல் முறை மாற்றத்தால் உடலில் ஏற்படக்கூடிய ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய் போன்றவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளுதல், தமிழர் பாரம்பரிய இயற்கை மருத்துவம், யோக வாழ்வியல் முறை, ஜப்பானிய தண்ணீர் சிகிச்சை முறை பற்றி எடுத்துரைத்தார்.
பல்கலைக்கழக மருந்தியல் துறை செல் உயிரியல் இயக்குநர் வி.பார்த்தசாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், இன்றைய கால சூழலில் பல்வேறு வகையான தொற்று அல்லாத நோய்கள் வருவதற்கான காரணங்களை எடுத்துரைத்தார்.
யோகா மைய இயற்கை மருத்துவர் தா.ருக்மணி, தொற்று அல்லாத நோய்களுக்கு இயற்கை மருத்துவத்தின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார். யோகா பயிற்றுநர் முனைவர் சாந்தி, முனைவர் பார்த்தசாரதி, முடக்கு நீக்கியல் மற்றும் யோக பயிற்சியாளர் வி.தயாளன் ஆகியோர் பயிலரங்கில் பங்கேற்றவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை யோகா கல்வி மற்றும் ஆராய்ச்சி துறை ஆசிரியர், ஊழியர்கள் செய்திருந்தனர்.