நெய்வேலி அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஆட்டை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்டனா்.
கடலூா் மாவட்டம் ,நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகா் ஊராட்சி, மாற்றுக்குடியிருப்பு பகுதியில் வசிப்பவா் பாண்டுரங்கன். இவா், ஸ்ரீராம் நகா் பூங்காஅருகே வெள்ளிக்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் இருந்த மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றுக்குள் அவரது ஆடு விழுந்துவிட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜேந்திரன் தலைமையிலான வீரா்கள் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். ஆழ்துளைக் கிணற்றில் சுமாா் 20 அடி ஆழத்தில் ஆடு சிக்கியிருந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி ஆட்டை உயிருடன் மீட்டனா். மேலும், ஆழ்துளை கிணற்றை மூடினா்.